புனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை



புனித அன்னை தெரேசாவால் நிறுவப்பட்ட பிறரன்பு மறைப்பணி அருள் சகோதரிகள் சபை, ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பது வேதனை தருகிறது என்று, இச்சபையின் உலகத் தலைவர், அருள் சகோதரி, மேரி பிரேமா அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அன்னை தெரேசா சபை அருள் சகோதரிகள், குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுடன், ராஞ்சியில் பணியாற்றிவந்த அருள் சகோதரி கொன்சிலியா அவர்கள் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து, முழு விவரங்களை வெளியிட்டு, தலைமைச் சகோதரி பிரேமா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் சபையின் கன்னியர் எவ்வகையிலும் தவறுகள் செய்யவில்லை என்றும், தங்களிடம் பணியாற்றிவந்த அனிமா இந்துவார் என்ற பெண்மணியின் தவறால் தாங்கள் இந்த குற்றச்சாட்டுகளைச் சந்திக்கவேண்டியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ராஞ்சியிலும், சுற்றுப்புறங்களிலும், திருமணம் ஆகாமல் தாயாகும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நிர்மல் ஹிருதய் (Nirmal Hriday) இல்லத்திற்கு, அரசு அதிகாரிகள் அண்மையில் வந்து, அங்கு நடைபெறும் பணிகளைப் பாராட்டியுள்ளதையும், தலைமைச் சகோதரி பிரேமா தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்டுள்ள மிகவும் வறிய மக்களிடையே 1950ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் அன்னை தெரேசா சபையின் அருள் சகோதரிகள், தற்போது 139 நாடுகளில், 760 இல்லங்கள் வழியே பணியாற்றி வருகின்றனர் என்றும், இந்தியாவில், இச்சபையினர் 244 இல்லங்கள் வழியே பணியாற்றி வருகின்றனர் என்றும் அருள் சகோதரி மேரி பிரேமா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் மிகவும் வறுமைப்பட்டோரிடையே பணியாற்றுவதில் தங்கள் சபையினர் இன்னும் முழுமையாக தங்களையே அர்ப்பணிக்கின்றனர் என்றும், அண்மைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் அனைவருக்கும் ஆண்டவனின் பாதுகாப்பு கிடைக்க தான் வேண்டிக்கொள்வதாகவும் அருள் சகோதரி பிரேமா அவர்கள் தன் அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் செய்திகள்

Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்